Friday, December 16, 2016

சிவயோகசுவாமிகள்

சிவயோகசுவாமிகள்

இப்பகுதி முழுவதும் எங்கள் குருபரனான யோகசுவாமிகளது உத்தம துறவுச் சீடர்களில் ஒருவரான செல்லத்துரை சுவாமியவர்களால் ஆக்கப்பெற்ற யோகசுவாமிகள் வாழ்க்கையும் வழிகாட்டுதலும் என்னும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்.

ஆசான் அருளால் ஆசானாயினார்

சிவயோகசுவாமிகளது நெறி குருநெறி. செல்லப்பதேசிகர் அவரது ஞானகுரு. செல்லப்பதேசிகரைச் சிவயோகசுவாமிகள் ‘இன்பசாகரமோனம்’ என்னும் வடிவாகக்கண்டார். மௌனமுனிவரான செல்லப்பர் சிவயோகசுவாமிகளைச் சாலம் செய்து தன்வசமாக்கினர். சதுர்வித உபாயத்தால் தானாகச் செய்தனர். ஆசான் அருளால் ஆசானாகிய சிவயோகக் குருமணி அரைநூற்றாண்டு காலமாக இச்சிவபூமியிலே ஞானதேசிகராய் நடமாடினார்.

சற்குரு தரிசனத்துக்குப் பக்குவராதல்

1.1. இளமை
யோகசுவாமிகள் தமது குருநாதரைத் தரிசித்து ஞானமுதிர்ச்சி பெறுவதன் முன்னர் எங்கே வளர்ந்தார்? எப்படி வாழ்ந்தார்? என்பன போன்ற விடயங்களை நிரல்பட எழுதக்கூடிய ஆற்றல் எவரிடத்திலும் இல்லை. சுவாமிகளிடம் இவ்விடயங்களை நேர்முகமாகக் கேட்கக்கூடியதாகவும் இருக்கவில்லை. ஏனெனில் அவர்களோ பெருந்துறவிகளாவர். அநுபூதி பெறாத துறவிகளிடத்தும் அவர்கள் பூர்வாச்சிரம விடயங்களைக் கேட்பது சைவர்களாகிய எமக்குப் பண்பாகாமை யாவரும் அறிவர். இஃது இவ்வாறாயின் உண்மை ஞானமே வடிவாக விளங்கிய மெய்ஞ்ஞானத் துறவிகளாகிய சுவாமிகளிடம் அவர் பூர்வாச்சிரம வரலாற்றினை யார்தான் விபரமாகக் கேட்க முடியும்!
நேரே தரிசனத்துக்குச் செல்பவர்களெல்லாரும் சுவாமிகளைச் சிவமாகவே பாவித்தும் பரவியும் பணிந்தும் வந்தார்கள். அப்படியாயிருக்கையில் அவர்கள் சுவாமிகளைச் சாதாரண மனிதனாக நினைக்கமாட்டார்கள். சாதாரண மனிதனாக நினைப்பவர்கள் சுவாமிகளின் தரிசனத்திற்குச் செல்லவும் மாட்டார்கள். சுவாமிகளின் சன்னிதானத்தில் இவ்வகையான வினாக்கள் எவருக்கும் எழுந்ததில்லை. சுவாமிகளின் சமாதியின் பின்பே அவர்கள் வரலாற்றை வரைய முற்படும் யாவரும் இவற்றை ஆராய்கின்றனர். அவ்வாராய்ச்சிகளெல்லாம் இங்கும் அங்குமாகச் சேர்த்துப் பொருத்திய தொடர்பேயன்றி எதுவும் உண்மைத் தொடர்பாய் இருக்க முடியாது.
ஒருவர் சுவாமிகளின் பிள்ளைத்திருநாமம் சதாசிவம் என்பர். இன்னொருவர் யோகநாதன் என்பர். வேறொருவர் தம்பிஐயா என்பர். இவ்வாறு ஒவ்வொருவரும் தாம்தாம் கேள்விப்பட்டதற்குத் தகக் கூறினாரே அன்றி எவராவது சுவாமிகளிடமிருந்து நேர்முகமாகக் கேட்டறிந்ததை நாம் அறியோம். வளர்த்த மாமியார் இப்படிக் கூறினார்; கூடித்திரிந்த விதானையார் இப்படிக் கூறினார்; என்றறிகிறோமேயன்றி உண்மையைத் திட்டவட்டமாய்க் கூறுவார் எவருமிலர். இந் நிலையில் சுவாமிகளின் சிறுவயதுக்கால வரலாறு இருள்சூழ்ந்த ஒன்றாகவே என்றும் இருக்கும். எனினும் சுவாமிகள் கூறியதாக நிலவும் சில கதைகளிலிருந்து அவர்கள் பூர்வாச்சிரமத்தை மேல்வருமாறு திரட்டிக் கூறலாம்.
வளம் நிறைந்த ஈழத்திருநாட்டின் வடபகுதியில் யாழ்ப்பாணம் எனும் சிறப்புடையதொரு நகரம் உளது. இந்நகரின் எல்லைக்குட்பட்டதாகக் கொழும்புத்துறை என்னும் ஓர் ஊர் உள்ளது. இவ்வூரின் பழங்குடிமக்கள் சைவப் பண்பில் சாலச்சிறந்து விளங்கினர். இவ்வூரே பல்லாண்டுகளாக எங்கள் குருநாதனின் வசிப்பிடமாகப் பொலிந்து விளங்கியது. தொன்மைமிக்க கந்தகோட்டம் விளங்கும் மாவிட்டபுரத்தில் தவத்திரு சின்னாச்சிப்பிள்ளை என்ற திருப்பெயரையுடைய இவரது அன்னையார் பிறந்தார். அவர்களின் சந்ததி உறவினர் இன்றும் அக்கிராமத்திலுள்ளனர். அவர்களுள் அண்மையிற் காலஞ்சென்ற யமன் அப்புக்குட்டி என்பவரைத் தமது மாமனார் என்று சுவாமிகள் கூறியது எமக்குத் தெரியும். தாயாரின் பிறப்பிடமாகிய மாவிட்டபுரமே சுவாமிகளினதும் பிறப்பிடமாகும். இவர்களது தந்தையார் பெயர் அம்பலவாணர் என்பதாகும். தந்தையார் பிறப்பிடமும் மாவிட்டபுரத்துக்கு அண்மையிலுளதாகும் என்பர் சிலர். உண்மை யாதென இற்றைவரை அறிகிலோம். என்றாவது அறிய வருமோ என்பதும் ஐயத்துக்கிடமேயாம். இஃது அத்தியாவசியமுமாகாது. இவர்களுடைய வாழ்க்கையைப்பற்றி விரிவாக அறிகிலோம். இவர்கள் மஸ்கேலியாப் பகுதியில் வியாபாரம் செய்து வாழ்ந்தமையால் கொழும்புத்துறையிலுள்ளார்க்கும் ஏனையோருக்கும் இவர்களைப்பற்றி ஏதும் விரிவாக அறிந்திருக்க முடியவில்லை போலும். சுவாமிகளின் சிறிய தகப்பனார் பெயர் சின்னையா. இவர் பிற்காலத்தில் கத்தோலிக்க கிறித்தவ மதத்தைத் தழுவியிருந்தார். அம்பலவாணர் சகோதரியாகிய முத்துப்பிள்ளை அம்மையாரிடமே சுவாமிகள் தமது சிறு பிராயத்தில் வளர்ந்து வந்தார். தகப்பனார் முதுசொமாகத் தமக்குச் சுன்னாகம் பூதவராயர் கோவிலடியில் ஒரு பனை வளவு இருப்பதாகச் சுவாமிகள் ஒரு முறை எமக்குக் கூறியுள்ளார். பெற்றாருடன் இவர் சிறுவயதில் கொழும்புத்துறையிலேயே வசித்து வந்தார். கொழும்புத்துறையிலுள்ள துண்டி என்று அழைக்கப்படும் பகுதியில் வாழ்ந்து வந்தார். அவர்கள் வளவில் குலதெய்வமாக ஒரு வைரவமூர்த்தியை வைத்து வணங்கி வந்தனர். பின் சுவாமிகளின் உறவினர் துண்டியை விட்டுக் கச்சேரியடிக்கு மாறிவிட்டார்கள். காரணம் யாதென அறிகிலோம். அப்படி மாறிய காலத்தில் அந்த வைரவ மூர்த்தியையும் எடுத்து வந்து விட்டார்கள். துண்டியில் சுவாமிகளின் யௌவனகாலம் கழிந்தது. அக்காலத்தில் தாங்கள் துண்டிவெளியில் விளையாடியதாகக் கூறினார்கள். ஒருமுறை சுவாமிகள் மற்றுஞ் சிறுவருடன் விளையாடிக் கொண்டிருக்கையில் யாரோ ஒரு கரையூர்வாசி இவர்களை அதட்டிப் பயமுறுத்தினாராம். அப்போது சுவாமிகள் பக்கத்தே நின்றவோர் பூவரசமரத்தில் கம்பு பிடுங்கி அவரைத் துரத்திக் கொண்டு போய் வெகு தூரத்தில் விட்டுவந்ததாகக் கூறினார்கள். அக்காலத்தில் சுவாமிகளை அம்பலவாணர்மகனெனவே அறிமுகம் செய்வார்களாம்.
மிகச் சிறுவயதிலேயே அன்னையார் சிவபதம் அடைந்து விட்டார் என்பர். ஆயினும் சுவாமிகள் எமக்கும் வேறு பலஅன்பர்க்கும் அடிக்கடி கூறிய மேல்வரும் சம்பவங்களிலிருந்து ஏறத்தாழ இவரது பத்தாவது வயதுவரையாவது அன்னையார் சீவித்திருக்கின்றார் என ஊகிக்க இடமுண்டு. ஒரு நாள் தாம் சாப்பிட்ட சட்டுவத்துடன் சோற்றினைக் கொண்டுபோய் வெளியில் வீசியபோது தம் அன்னை “நீ பிச்சையெடுத்துத் தான் சீவிப்பாய்” என்று கூறியபடி என்றும் ஒரு பிச்சைக்காரனாகவே தாம் வாழ்ந்து வருவதை மிகவும் இறும்பூது கொண்டு சொல்லி மகிழ்வார். “தாய் சொல்லைத் தட்டாதே” எனும் ஓளவை மொழியை அடிக்கடி உணர்த்தவும் இச்சம்பவத்தைக் கூறுவார். அன்றியும் மாவிட்டபுரம் கந்தசுவாமிகோயில் தேர்த் திருவிழாவுக்குத் தமது அன்னையார், கையிற் பிடித்துக் கூட்டிச் சென்றதாகவும், ஒரு முறை நல்லூர் முருகன் கோயிற்றிருவிழாவுக்குத் தாயாருடன் செல்லும் பொழுது இருபகுதி மக்கள் கலகம் செய்து கல்லெறிபட்டதாகவும், தமது காலொன்றில் ஒரு கல்பட்டுத் தாம் வருந்தியதாகவும் கூறியுள்ளார்.
தமது அன்பர்களுக்குக் கதையோடு கதையாகக் கூறியவற்றிலிருந்து இவர் பிறந்த காலத்தை ஆங்கீரச வருடம் வைகாசி மாதம் பதினெட்டாந் தேதி புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம்பாதம் எனத் தமிழ்ப்பஞ்சாங்கக் கணக்கின்படி ஒருவாறு ஊகித்துக் கணக்கிட்டிருக்கின்றனர். (இது ஆங்கிலேயர் கணக்கின்படி 1872 ஆம் ஆண்டு மே மாதம் 29ம் தேதிக்குச் சரியாகும்.) இக்குறிப்பின்படி சந்நியாச யோகமே விசேட பலனாகும். எனவே அம்பலவாணருக்கும் சின்னாச்சிப்பிள்ளை அம்மையாருக்கும் அருந்தவக் குழந்தையாக 1872ம் ஆண்டு யோகநாதன் அவதரித்தார் எனநாம் நிச்சயம் செய்யலாம்.
 1.2. கல்வி
சுவாமிகள் கல்விகற்ற பாடசாலை கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த கத்தோலிக்கப் பாதிரிமாரின் ஒரு நிறுவனமாகும். அக்காலத்தில் கிறித்தவப் பாடசாலைகளில் சேர்க்கும் சைவப்பிள்ளைகளுக்கும் ஒரு கிறித்தவப் பெயரை முன்வைத்தே பாடசாலைப் பதிவேடுகளில் பதியும் வழக்கம் இருந்தது. அதற்கியையப் பாடசாலையில்  ஜோன் என்னும் நாமம் இடப்பட்டதாக அறிகிறோம். அதற்குமுன் அவர்களின் பிள்ளைத்திருநாமம் எது என்பதை அறிவார் எவரும் ஈண்டிங்கில்லை. பாடசாலையில் படிக்கும்போது மிகுந்த துடிப்பும் வீரமும் விளங்கிய ஒரு பாலகனாகவே காணப்பட்டார். ஆரம்பப் பாடசாலைப் படிப்பின் பின் சிறியதந்தையார் உதவியுடன் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கலாசாலையில் (St. Patricks College) சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் படித்தார். இத்துடன் அவரது பாடசாலை வாழ்வு நிறைவுற்றது.
1.3. இயற்கையழகும் இறை நினைவும்
பாடசாலைப் படிப்பு முடிந்ததும் தந்தையார் மைந்தனை அழைத்துக்கொண்டு தாம் தொழில் செய்யும் இடமான மஸ்கேலியாவுக்குச் சென்றனர். அங்கே மைந்தன் தம்மோடிருந்து தொழில் பயில வேண்டுமென்பதே தந்தையின் விருப்பமாயிருந்தது. ஆனால் மைந்தரோ பசுமையும், குளிர்மையும் நிறைந்த மலைப்பிரதேச அழகிலே மனம் பறிகொடுப்பவராயிருந்தார். நுண்துமி சிந்தும் வேளைகளில் சட்டையும் அணியாமல் பிடித்தமான ஓரிடத்து அமர்ந்து வெறித்த பார்வையினராயிருப்பார். பவளநிறமான பாக்குக்குலைகளுடன் நீண்டு வளர்ந்து நிற்கும் கமுகு மரங்களில் அவர் நெடுமாலைக்கண்டனரோ? பட்சிகளின் தீங்குரலினிமையில் கண்ணனின் புல்லாங்குழலிசை நினைவு வந்ததோ? மலைச்சாரலில் கிளைத்தோங்கி நிற்கும் தனிமரம், ஆடும்மயிலையும் அம்மயிலிலேறிவரும் குன்றுதோறாடும் குமரனையும் ஞாபகமூட்டியதோ? இருந்தபடியே இருக்கும் மலைகளும், அம் மலைகளில் தவழ்ந்து விளையாடும் மேகமும் பேசும் மௌன மொழியின் சுகம் புரிந்ததோ! எழிலார்ந்த இயற்கைக் கோலங்களாய்ப் பொலிந்து தோன்றுவது இறைவனின் இன்னருளேயென்பதை நுணுக்கமாய்க் கண்டனரோ? இவ்வாறு தனிமையில் இட்டகால் இட்டகையனாக அமர்ந்து பேயே போன்றிருக்கும் இயல்பு, இலாபத்திற் கண்ணாயிருக்கும் வியாபாரத் தொழிலுக்கு ஏற்றதல்ல என்பதைத் தந்தையாரறிவார். ஆதலால் மைந்தனை மஸ்கெலியாவிலிருந்து கொழும்புத்துறைக்கு அனுப்பி வைத்தார்.
1.4. வணக்கம் மணக்கும் வேலை
கொழும்புத்துறையைச் சேர்ந்த சிறிது காலத்தில் கிளிநொச்சியில் இரணைமடுக்குளத் திட்டத்தில் வேலைக்கருவிக் களஞ்சியப் பாதுகாவலர் எனும் உத்தியோகம் அவருக்குக் கிடைத்தது. இவ்வுத்தியோகம் அவருக்கு மிகவும் உவப்பாய் அமைந்தது. காலையில் வேலைத் தலத்திற்குச் செல்வோர்க்கு வேண்டிய கருவிகளை எடுத்துக் கொடுப்பதும் மாலையில் அவற்றைப் பெற்றுப் பக்குவமாக வைப்பதும் ஆய இவையே அத்தொழிலின் வேலைகள். எனவே இது ஒரு சோலியற்ற ஆறுதலான தொழில். குடிமனைகள் குறைந்ததும், மயிலாடுஞ் சோலைகளையுடையதுமான ஆரணியச் சூழலிலே வாய்த்த இந்த ஆறுதலான தொழில் அவர் எண்ணிய வண்ணம் வாழ ஏற்றதாயமைந்தது. அவர் தமது கடமையைக் கவனமாகச் செய்தார். தம்முடைய உத்தியோகக் கடமைக்கு மேலாக அலுவலகச் சூழலிலே கனிதரும் மரங்களை நட்டுக் கவனமாகப் பராமரித்து வந்தார். அவ்வாறு அவர் பாராமரித்து வளர்த்த மாமரம் ஒன்று இன்றும் ‘சாமியார் மரம்’ எனும் பெயருடன் கிளிநொச்சியிலுள்ளது. (இதன் வித்துக்களின் முளைத்த கன்றுகளில் ஒன்று வளர்ந்து, கிழக்கே செங்கலடி சிவதொண்டன் நிலையத்தில் நின்று கனி உதவுகின்றது. கிளிநொச்சியில் அந்த மாமரம் இருக்கும் காணியும் சிவதொண்டன் சபையாரின் உபயோகத்துக்கென உறுதி முடிக்கப்பட்டுள்ளது.) அவர் தம்மோடு பணிபுரிபவர்களுடன் அன்பார்ந்த உள்ளத்தினராய்ச் சந்தோஷமாகப் பழகினர். பண்போடு வார்த்தையாடினர். பணப்பற்றுச் சிறிதும் இல்லாதவராயிருந்தனர். தாம் பெறும் அந்த அந்த மாதச் சம்பளத்தை அந்த அந்த மாதத்திலேயே செலவழித்துவிட்டு அடுத்த மாதத்துக்கென எதுவும் சேகரியாதிருக்கும் பழக்கத்தைப் பேணி வந்ததாகப் பின்னர் தம் அன்பர்களிடம் கூறினர். தமக்கு வேண்டியது போக மீதியைக் கோயிற்கருமங்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், ஏழை எளியவர்க்கும் கொடுத்து வந்தனர். அவரது சொல்லும் செயலும் அவருள்ளே நிறைந்து கிடக்கும் அதிமானுடத்தைப் பறை சாற்றி நின்றமையை அவரோடு பழகியோர் பலரும் அறிந்தனர். அவர்கள் இயல்பாகவே சுவாமிகளை உயர் நிலையில் வைத்து மிகுந்த மரியாதையோடு பழகினர். பின்னாளில் துறவு மனப்பான்மை முதிர்ந்து உத்தியோகத்தினின்றும் விலகும் எண்ணத்தைத் தெரிவித்த பொழுது மேலதிகாரியாக இருந்த ஆங்கிலத் துரை (BROWNY) சிறந்த ஊழியரொருவரை இழப்பதற்கு விரும்பாமையால் அவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் சுவாமிகளிடம் வேண்டினார். சுவாமிகள் தம்முடிவில் நிலையாய் நிற்பதைக் கண்டதும் “நீங்கள் வேலையைவிட்டு விலகுவதானால் உங்களுக்கு விருப்பமான ஒருவரை இவ்வேலையில் சேர்த்துவிட்டாதல் செல்லுங்கள்” எனச் சுவாமிகளிடம் வேண்டிக் கொண்டார். இத்தகவலை இவ்வேற்பாட்டின்படி வேலையிற் சேர்ந்துகொண்ட சுவாமிகளை வளர்த்த மாமியாரின் மகனான வைத்திலிங்கம் என்பார் எமக்குக் கூறினர்.
1.5. ஞானியர் நாட்டம்
சுவாமிகள் கிளிநொச்சியில் தொழில் புரியும் காலத்திலேயே சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயம் நிகழ்ந்தது (1897). அப்பெரியாருக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் சுவாமிகளும் உற்சாகத்துடன் பங்குபற்றினர். கோட்டையிலிருந்து இந்துக்கல்லூரி வரை சென்ற ஊர்வலத்திலும், பின்னர் கல்லூரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் சுவாமிகள் கலந்து கொண்டனர். பின்னாட்களில் அவர் தம் அன்பர்களிடத்து “விவேகானந்தர் மேடையின் இருபக்கங்களிடையேயும் சிங்கக் குட்டி போல் உலாவிக் கொண்டு பேசினார்” எனவும், “அவர் பேசினார் என்பதிலும் சிங்கம் போல் கர்ச்சித்தார் என்பதே சரி” எனவும் கூறி மகிழ்ந்தார். அவர் பேசிய முதல் வசனத்தைப் பல தடவைகளில் அன்பர்களுக்குக் கூறியிருக்கிறார். “விடயம் பெரிது நேரமோ குறுகியது” (The Subject is large but the time is short) என்பதே அவ்வாசகமாகும். விவேகானந்தருடைய வருகை தொடர்பாகச் சுவாமிகள் உற்சாகமாகக் கூறியவிடயங்கள் இளமைக் காலத்திலே அவரிடத்தில் மண்டிக் கிடந்த ஞானியர் நாட்டத்தை ஒருவாறு உணர்த்துவனவாயிருந்தன.
1.6. கோயில் வழிபாடு
அன்னையின் கையைப்பிடித்துக் கொண்டு நல்லூருக்குச் சென்ற பிள்ளைப் பராயந் தொட்டு நல்லூரான் அவர் சிந்தையிற் குடி கொண்டிருந்தான். நல்லூர் வீதியை வலம் வருவதும், வீதியில் விழுந்து கும்பிடுவதும் அவருக்கு உருக்கமான அனுபவங்களாய் அமைந்தன. சண்பக மரத்தடியில் நிற்கும் சாதுக்கள் கூட்டத்தை அவதானித்து நிற்பதில் அவர் மகிழ்ச்சி கண்டார். வகைவகையான பச்சையரிசி, வாழைக்குலை, தேங்காய் முதலிய பூசனைப் பொருள்களை உவகையுடன் கொண்டு வந்து உதவும் அன்பர்களைக்கண்டு ஐம்புலன் அடங்கி நிற்கும் அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டன. அவர் அந்தணர்கள் அஞ்சடுக்குத்தீபம்முதல் அடுக்கடுக்காய் தீபங்காட்டத் தரிசனந்தந்து நிற்கும் சோதிப்பிரகாச வேலனைத் தரிசித்துக் கண்கள் பனியரும்புதிர நின்றனர். ஆகையால் நல்லூர்த் திருவிழாக் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து எந்நாளும் நல்லூரை வலம்வந்து வணங்கினார். திருவிழாக்காலங்களில் அங்கப்பிரதட்டனம் செய்து நல்லூர் வீதியை வலம் வருவது அவரது நியமமாயிருந்தது. ஒரு முறை கொழும்புத்துறையிலிருந்து நல்லூருக்கு அங்கப்பிரதட்டனம் செய்தனரென முன்னர் குற்ப்பிட்ட வைத்திலிங்கம் என்பவர் கூறினார்.
1.7. ஞான நூற்பயிற்சி
வைத்திவிங்கம் என்பார் கூறிய இன்னொரு முக்கிய விடயம், சுவாமிகள் அந்நாட்களில் நீண்ட நேரத்தைச் சமயநூல்களை வாங்கிப் பாடமாக்குவதில் போக்கினார் என்பதாகும். ஆறுதலும், ஓய்வும் நிறைந்த அவர்பார்த்த உத்தியோகம் நூல்களைப்படிப்பதற்கு வாய்ப்பானதொன்றே. அவர் பெரும்பாலான சமயத் திருநூல்களைக் கற்றனர். தமிழிலும், வடமொழியிலும், ஆங்கிலத்திலும் உள்ள ஞானநூல்கள் பலவற்றையும் கற்றனர். அவையெல்லாம் சிரமப்பாடெதுவுமின்றி அவருக்கு மனனமாயின. அவருடைய உள்ளம் பளிங்குபோல் தூயதாயிருந்தமையால் இவ்வாறு இலகுவில் மனனமாவது இயல்பாயிற்று. சைவத்திருமுறையையும் தமிழ் மறையாம் திருக்குறளையும் ஆர்வத்தோடு படித்தார். இப்பொழுது சிவதொண்டன் நிலையத்தினர் தொகுத்து வெளியிட்டிருக்கும் சைவத்திருமுறைத் திரட்டு என்னும் நூலிலுள்ள பாடல்கள் யாவும் சுவாமிகள் அவ்வப்போது தம் நினைவிலிருந்து சொன்னபாடல்களே என்பது பலருக்கு வியப்பாக இருக்கும். பெரும்பாலான திருக்குறளும், ஔவை மொழியும் அவருக்கு மனனமாயிருந்தன. தாயுமானார் பாடல்களையும், பட்டினத்தடிகளின் திருநூல்களையும், சித்தர் பாடலையும் கற்றனர். அக்காலத்தில் திருவிழாக்காலங்களிலே ஏராளமான சிறுநூல்கள் விற்பனையாவது வழக்கமாயிருந்தது. அவற்றுள் சிறந்த ஞானநூல்களாய் உள்ளவற்றை ஆர்வத்தோடு வாங்கிப் படித்தனர். அவ்வாறான நூல்களுள் குருநமசிவாயர் என்பார் பாடிய நமசிவாய மாலையும் ஒன்று என்பதையும், அந்நூல் முழுவதும் சுவாமிகளுக்கு மனனமாயிருந்தது என்பதையும் நாம் அறிவோம். பின்னர் சுவாமிகளின் பணிப்பின்படி அந்நூலை தட்டச்சுச் செய்து பலரும் படித்துப் பயனடையுமாறு வெளியிட்டோம். சுவாமிகள் தாமும் குருநமசிவாயர் பாடியதைப்போன்று ஒரு நமசிவாயமாலை பாடினர். அந்நாட்களில் பிரபலமாயிருந்த ஒரு ஞானநூல் தத்துவராய சுவாமிகள் பாடிய ‘பாடுதுறை’ என்னும் நூலாகும். அந்நூல் குருநெறிச் சென்று பெற்ற அனுபூதி ஞானத்தைப் பயிலுந்தமிழிலும் எளிமையான மெட்டிலும் இனிமையாகக் கூறுவது. பரந்த தமிழ் நூற்பரப்பிலே சுவாமிகள் பாடியது போன்ற ஒரு ‘பல்லிப்பாட்டு’ ‘பாடுதுறையில்’ மட்டுமேயுள்ளது. சிறந்த தத்துவநூற்புலவரான தத்துவராயரது ‘பாடுதுறை’ யைச் சுவாமிகள் நன்றாக மனதிற்பதித்துக் கொண்டனர். பகவற்கீதை, முதன்மையான உபநிடதங்கள், சங்கராச்சாரியாரது பிரமசூத்திரபாஷ்யம் முதலிய வடமொழியிலுள்ள ஞானநூல்களையும் கற்றுத் தேர்ந்தனர். விவிலியவேதத்திலுள்ள திருவசனங்கள் பல அவருக்கு மனனமாயிருந்தன. பிற்காலத்தில் சுவாமிகளை அண்டிவாழ்ந்தவரான சந்தசுவாமி விவிலியவசனங்கள் பலவற்றின் உட்பொருளைச் சுவாமிகளின் வாய்மொழிகளிலிருந்தே தெளிவாக விளங்கிக் கொண்டதாகக் கூறினர். குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களும், இஸ்லாமியத் திருமறையான குர்ஆனின் வசனங்கள் பலவும் அவருக்கு மனனமாயின. பின்னாட்களில் தன்னையண்டி வந்த நூலறிவாளர் பலரையும் தன் காலடியில் மண்டியிட்டுக் கிடக்கச்செய்யும் கலை ஞானத்தை இந்நாட்களில் சுவாமிகள் ஈட்டிக் கொண்டனர்.
கிளிநொச்சியில் பணிபுரியும் காலத்திலே பிரமசரிய விரதம் பூண்டிருந்த சுவாமிகள் ஒழுக்கத்தால் வைரித்த வாழ்வு, வணக்கம் மணக்கும் வேலை, கடவுட்பக்தி, ஞானியர்நாட்டம், ஞானநூற்பயிற்சி என்னும் இயல்புகள் முதிர்ந்து “இறைகளோடிசைந்த இன்பம், இன்பத்தோடிசைந்த வாழ்வு” வாழ்வதற்குத் தகைமையான ஒருவராய் மலர்ச்சி பெற்றிருந்தார். இவற்றையெல்லாம் சுவாமிகளின் அலுவலகத் தலைவராகப் பதவிவகித்த பிறௌனி எனும் ஆங்கிலேயர் கூறிய வசனம் திரட்டித்தருகிறது. அவர் “நீர் ஒரு தெய்வீக மனிதர் (You are a God-fearing man)” எனத் தம்மை நோக்கிக் கூறியதாகக் கதையோடு கதையாகச் சுவாமிகள் எமக்குக் கூறினர்.

Saturday, August 8, 2009

தமிழ் மெய்யியல்

தமிழ் மெய்யியல் - அறிவு நிலைகள் பத்து நுண்மான் நுழைபுலம் பாட்டுநெறி

இரா.குப்புசாமி(ஆர்.கே)

ஆங்கில மகாகவி மில்டன் 'இழந்த சொர்க்கம்' என்ற தலைப்பில் ஒரு காப்பியத்தை இயற்றினார். அது பைபிள் கதையை அடிப்படையாகக் கொண்டது. இறைவன் உண்டாக்கிய சொர்க்க பூமியான ஏதேன் தோட்டத்தில் நிர்வாணமாக விடப்பட்ட ஆதாமும் ஏவாளும் இரண்டு குழந்தைகள் போல் தூய வாழ்க்கை வாழ்கின்றனர். இந்திய ஞான மரபில் உள்ள சொற்களைக் கொண்டு சொல்வதானால் அவதூதர்களின் வாழ்க்கை வாழ்கின்றனர். அந்த வாழ்க்கையைத் தன் கவிதாஞானத்தின் மூலம் கண்ட மகாகவி மில்டன் அற்புதமான பாடல்களால் வர்ணிக்கிறார். ஆனால் அவருக்குப் பின்வந்த ஆங்கிலக் கவியும், விமர்சகரும் ஆங்கில அகராதி தயாரித்தவருமான சாமுவேல் ஜான்சன் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. தூய அந்த ஞான நிலையை சாதாரண மனிதனான மில்டன் எவ்வாறு கற்பனை செய்ய முடியும்? அது யாராலும் இயலாது. ஏசுவைப் போன்ற தெய்வநிலையை மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது. கவிதைக்கலை, ஞானநிலையை எட்ட முடியாது என்று மதவாத அரசியல் பேசினார்.

ஆனால் அவருக்குப் பின் வந்த ஆங்கிலக் கவி வில்லியம் வேர்ட்ஸ்வர்த் கவிதா எழுச்சியின் மூலமே சமாதி நிலையை அடைந்து எழுத்தில் காட்டுகிறார். அழகான இயற்கைச் சூழல் கொண்ட 'டின்டெர்ன் ஆபி' (Tintern Abbey) என்ற இடத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உன்னதமான கவிதை வரிகளில் படம் பிடித்துக் காட்டுகிறார். இந்தக் கவிகளுக்கு எந்த யோகப் பயிற்சியும், அது பற்றிய கேள்விஞானமும் கூட கிடையாது. ஆனால் இயல்பாக கவிதை உணர்ச்சியின் ஆவேசத்தால், யோகத்தின் எட்டாவது படியான சமாதி என்ற ஞானநிலையை அடைகின்றனர். சமாதி நிலையில் எண்ணம் அற்றுப் போகும். எண்ணம் அற்றவுடன் துன்பமும், கால உணர்வும் அற்றுப்போகும். பேச்சு அற்றுப் போகும். அத்துடன் மூச்சும் நின்றுவிடும்.

ஆனால் உடலில் உயிர் தங்கும். கவிதையின் புனிதம் அந்த வரிகள்:

... that serene and blessed mood,
In which the affections gently lead us on,
Until, the breath of this corporeal frame
And even the motion of our human blood
Almost suspended, we are laid asleep
In body, and become a living soul:
While with an eye made quite by the power
Of harmony, and the deep power of joy,
We see into the life of things.‘

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற ஞான விதிக்கு இக் கவிதையின் கடைசி வரி சான்றாக அமைவது வியப்பைத் தரும் உண்மை. அறிவர்கள் எக்காலத்திலும் எவ்விடத்திலும் ஒரே அலைவரிசையில் அனுபவம் பெறுவர் போலும். சித்தர்களின் ‘தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்' (பத்ரகிரியார்) ‘செத்தாரைப் போலே திரி' (பட்டினத்தார்) போன்ற ஞான அனுபவங்களுக்கும் ஐந்தாவது வரி சான்று பகரும். உச்சபட்ச அனுபவ நிலையில் கவியும், ஞானியும் ஒன்றே என்பதையே இவை காட்டுகின்றன. அதனால்தான் போலும் ஆங்கிலக் கவி ஜான் கீட்ஸ் அமரத்துவம் பெற்ற கவிதை வரிகளால் இந்த ஆழமான மெய்யியல் உண்மையை வெளிப்படுத்தினான்: "Beauty is truth, truth beauty - that is allYe know on earth, and all ye need to know'‘

அழகே உண்மை, உண்மையே அழகு. இதை மட்டும் நீ
மண்மீது அறிய முடியும்; அறிய வேண்டியதும் இது மட்டுமே'

மனம் கடந்த ஞான அனுபவம் தனிமனிதச் சொத்து. ஞானக்கவிதை மனித குலத்தின் பொதுச் சொத்து. எனவே ஞானியை விட உயர்ந்தவன் ஞானக்கவி. கீட்ஸ் இறந்த பொழுது உலகப் புகழ்பெற்ற இரங்கல் கவிதைகளுள் ஒன்றை ஷெல்லி எழுதினான். Adonais என்ற அக்கவிதையில் கவிஞனுக்கு அவன் தரும் இடம் ஞானிக்கும் இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு உலகங்களிலும் அமரத்தன்மை பெற்றுவிட்டாய். இந்நேரம் உன் ஆன்மா அமர உலகில் அமரர்களுக்கு கவி அமுதம் அளித்துக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் மண்மீது மனிதர்கள் உன் அமுதக் கவிதைகளிலிருந்து நீ அளிக்கும் உயிர்ச்சாற்றை அருந்திக்கொண்டிருப்பர் என்று எழுதுகின்றான்.

ஒவ்வொரு நாள் விடிகாலையில் எழுந்ததும் முதல்வேலையாக குரு நித்ய சைதன்ய யதி செய்தது இரண்டு வேலைகள்: ஒன்று, சேலம் இசைவாணி ஜெயலட்சுமி பாடிய தேவார, திருவாசகங்களைக் கேட்டுக் கண்ணீர் விடுவது; (‘என் மரபின் உன்னதத்தை இது நினைவுறுத்தும்' என்பார்) இரண்டாவது ஆங்கில ரொமாண்டிக் கவிஞர்களான வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ், பைரன் ஆகியோரின் கவிதைகளை வாசிக்கச் சொல்லிக் கேட்பது. வாழ்க்கையை இவ்வளவு உக்கிரத்துடன் வாழ வேண்டும். 24 வயதே வாழ்ந்தவன் கீட்ஸ்; 26 வயதே வாழ்ந்தான் ஷெல்லி; பைரவனுக்கு 36. ஆனால் இந்த இரண்டு அல்லது மூன்று பத்தாண்டுகளில் அவர்கள் அனுபவித்த வாழ்வனுபவத்தின் ஆழம் தேவர்களுக்கும் எட்டாதது என்பார்.

ஒரு கவிஞனாக நான் வாழ்ந்த கணங்கள் மட்டுமே எனக்குத் திருப்தியை அளித்துள்ளன. இது அனுபவ உண்மை, அனுபவித்தால் அன்றிச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதனால்தான் ‘மகா' என்ற சொல்லை ஜெர்மானிய மகா கவி ‘கதே'வுக்கு மட்டும் வழங்கினேன் என் ‘உயர்த்திரு'என்ற கவிதைத் தொகுப்பில்.

தொல்காப்பியத்தில் இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள், யாப்பு அல்லது செய்யுளியல் என்ற அளவோடு நிறுத்திக் கொண்டான் தொல்காப்பியன். அணி இலக்கணத்தை வடநூலார் போல விரிவாக எழுதவில்லை. ஏன் என்ற கேள்வி தமிழ் மரபின் உண்மை மெய்யியலை அறியப் பயணப்படும் பாதையில் நம்மை அழைத்துச் செல்லும். உவமை, உருவகம், உள்ளுறை, உவமம், இறைச்சிப்பொருள் என்பவனற்றோடு நிறுத்திக்கொண்டான் தொல்காப்பியன். சொல் அணிகள் (Figures of Speech) மற்றும் பொருளணிகள் (Figures of thought) என நூற்றுக்கணக்கில் அணிகளை விரித்து உரைப்பது வடமொழியிலும் மேலை நாட்டு இலக்கண நூல்களிலும் காணப்படுகின்றது. வடமொழித் தாக்கத்தினால் மேம்போக்கான இந்தச் சொல் மற்றும் கருத்து ஜாலங்களை இடைக்காலத் தமிழ்ப் புலவர்கள் போலி செய்து உண்மைத் தமிழ் மெய்யியலை மறந்தனர். மறந்ததால் பிறவற்றைத் தழுவினர். மக்களையும் மறந்து போகச் செய்தனர்.
தொல்காப்பியம் வெறும் இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. மற்ற மொழி இலக்கண நூல்களைப் போன்றது தானே இதுவும் என்பது தவறான பார்வை. அளக்கும் அளவுகோலே தவறு. அது ஒரு மெய்யியல் நூல். மனித வாழ்க்கையைப் பற்றிய மெய்யியல் நூல் மட்டுமல்ல, வாழ்க்கையை ஆராய உதவும் மொழியின் மெய்யியலையும் ஆழ்ந்து உணர்ந்து வெளிப்படுத்தும் மறை. இது உண்மையா? ஒவ்வொரு தமிழறிஞரும் இந்த நோக்குடன் தொல்காப்பியத்தைப் படிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

'காப்பியம்' என்ற சொல் சாதாரணமாகப் பெரும் கதையாடல்களைக் குறிக்கும். இராமாயணம், மகாபாரதம், ஐம்பெருங்காப்பியங்கள், கிரேக்க மொழியில் இலியாது, ஒதிஸி என்று பல. ஆனால் காப்பியம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ் தொல்காப்பியன் கதைகளைக் கூறவரவில்லை. ஏன்? மலையைத் தோண்டி எலியைப் பிடிக்க முயல்வதல்ல ஆதித் தமிழர் நெறி. வெளிப்படையாக, விஞ்ஞான மொழியில் நேரிடையாக உண்மையை உரைப்பது, ‘காப்பியம்' என்ற சொல் காப்பு+இயம் என்று பிரியும். ‘இயம்' எனில் இயற்றுதல், எதை? காப்பை. எதைக் காப்பது? வாழ்வை, குறிப்பாக உயிரை. உயிர், உடல், உலகம், இறை, வாழ்தல்-இவற்றின் உண்மைகள் என்ன? என்று ஆராய்தலே தத்துவம் அல்லது மெய்யியல் எனப்படும். இவற்றின் எல்லாக் கூறுகளையும் மிகத் தெளிவாக, மிக ஆழமாக ஆராய்கிறது தொல்காப்பியம். எனவே அது முழுமையானதோர் மெய்யியல் நூல். அதன் மெய்யியல் கூறுகளில் சிலவற்றை ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும். இலக்கியம் வாழ்விலிருந்து பிறப்பது, வாழ்வை செம்மைப்படுத்த வழி கோலுவது. வாழ்வைச் செம்மைப் படுத்தலே தத்துவத்தின் தலையாய நோக்கம். மிகச் சிறந்த வாழ்க்கை எது? அதை நாம் அடைவது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண முயல்பவையே உலகின் எல்லாத் தத்துவ நூல்களும். அவற்றுள் தனித்தன்மை வாய்ந்தவை தமிழ் மரபின் தத்துவ நூல்கள்.

வாழ்வை அகம், புறம் என்று முதலில் இரண்டாகப் பிரிக்கின்றது தமிழ் இலக்கண மரபு. மொழி மற்றும் இலக்கணம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி. பிம்பங்கள் மாறுபாடு இன்றித் தெளிவாக உண்மையாகக் காணப்படுகின்ற அளவிற்கு வாழ்க்கை தெளிவாகப் புரியும். பயணம் சுகமாக இருக்கும். அகம், புறம் என்ற முதல் பிரிவை மேலும் நுட்பமாக்கி அகத்தை அகம், அகப்புறம் என்று இரண்டாகவும், புறத்தை புறம், புறப்புறம் என்று இரண்டாகவும் பகுப்பர் இராமலிங்கர் போன்ற தமிழ் ஞானிகள்.

புறப்புறத்திலிருந்து, இயற்கையிலிருந்து மனதுக்கு உணர்வு திரும்புவது வரை புறம். தனித்த சீவனிலிருந்து பொதுவான அகம் என்ற ஆத்மாவுக்கான பயணம் ‘அக இலக்கியம்.' ஆதித் தமிழர் வாழ்வில் இலக்கியமே ஞானம். ஞானம் உணர்வுக்கூர். ஒருசிலருக்கன்றி, யாவருக்குமாம் சமுதாய நெறி ஞானம்.

புறப்புறம் என்பது பஞ்சபூதங்களாலான புற உலகம். அதை அறிய உதவும் அறிவுக் கருவிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய உடலும். இவை இரண்டும் ஒரே சொல்லாகக் குறிக்கப்படுவது தமிழ் மெய்யியலின் தனிச்சிறப்பு. ஏனெனில் இவை இரண்டும் ஒரே வகையான பொருளால் ஆனவை. புறப்புற உலகில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை மனித உடலில் தோன்றும், பிரதிபலிக்கும். அதேபோல் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களும் புற உலகைப் பாதிக்கும். இந்த உண்மையை கி.பி. 1960களில் தான் மேற்குலகம் அறிந்தது. ரேச்சல் கார்சன் (Rachel Carsen) என்ற பெண்மணி ‘நம்மைச் சுற்றியுள்ள கடல்' என்ற நூலை எழுதிய பிறகு தான் ‘சுற்றுச் சூழல் இயல்' என்ற தனிப்பட்டதோர் அறிவியல் தோன்றிப் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் ‘‘இயற்கையும் மனித உடலும் ஒன்றே'' என்ற மெய்யியல் உணர்விற்கு அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை.
தொல்காப்பியன் திணைப்பகுப்பை செய்கின்ற பொழுது இயற்கையை ஒட்டியே மனித மனத்தையும், வாழ்வு அனுபவத்தையும் சமன்பாடாக்கி ஐந்து அகநிலங்களாகப் பிரித்துக் காட்டுவான். இதை ஏ.கே. இராமானுஜன் போன்ற அறிஞர்கள் (Inner landscape) என்று மிகப் பொருத்தமாக மொழிபெயர்க்கின்றனர்.
இயற்கையே முதற்பொருள் மற்றும் கருப்பொருள். இந்த அடித்தளத்தின் மீதே அனுபவம் என்னும் மேல்கட்டுமானம் தோன்றுகிறது. அதை நுட்பமான உணர்வு கொண்ட கவி உள்ளம் செம்மைப்படுத்தி, சுவை கூட்டி, தன் சொத்தாக சமுதாயத்திற்கு விட்டுச் செல்கின்றது. அடிப்படையின்றி மேல்கட்டுமானம் சாத்தியம் அல்ல என்பதை மன அளவிலும் உணர்ந்து அதையொட்டி இலக்கணத்தை அமைத்த ஆதித் தமிழ்ச் சான்றோர் மாபெரும் மனோ தத்துவ ஞானிகள். இது எப்படி?

மனத்தை ‘புறம்' என்ற சொல்லால் குறித்தனர். ஏன்? மனதின் அடிப்படைகள் காலமும், இடமும். இவ்விரண்டுமின்றி அனுபவத்தைச் சொல்ல முடியாது. காலமும் இடமும் செயல்படுவது ‘மனம்' என்ற உணர்வில். இதை உணர்த்த சொற்களும், உவமைகளும் போதும். காலம், மனம் கடந்த நிலையில் அனுபவங்கள் உண்டா? எனில் உண்டு. அவற்றை கடப்பிய அனுபவம் அல்லது ஞான அனுபவம் (Transcendental Experience) என்பர். ‘‘சொல்லாமல் சொன்னதை நினையாமல் நினைந்து'' என்பன போன்ற புதிர்த் தொடர்களால் இவை சுட்டப்படும். இந்தவகை மறை அனுபவங்களை உணர்த்த வந்த இலக்கிய வகை ‘இறைச்சிப்பொருள்' என்று தனித்து வழங்கப்பட்டது.

மனதின் அடிப்படை கால உணர்வும், இட உணர்வும். இதனைக் காலமறிதல், இடனறிதல் என்பார் வள்ளுவர். கி.பி பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஜெர்மானிய தத்துவஞானி இமானுவேல் கான்ட், ஏதோ தான்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார். இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்குப் பின் வந்த தத்துவவாதிகள் அவரை உலக மகா தத்துவவாதியாகக் கருதி ஆர்ப்பரிக்கின்றனர். வள்ளுவனும், தொல்காப்பியனும் எளிமையான இந்த உண்மையை முன்பே அறிந்திருந்தனர்.
தற்கால உதாரணத்தைக் கூறினால் இது புரியும். மனித மூளையிலே பிணியல் (Pineal) என்ற ஒரு சுரப்பி இருக்கின்றது. அதில் மெலடானின் (Melatanin) என்ற ஓர் திரவம் சுரக்கின்றது. இதுவே உறக்கத்தையும் கால உணர்வையும் தருகிறது. உறக்கம் வராத நோயாளிகளுக்கு இந்தப் பொருள் கொண்ட மாத்திரைகளையும், ஊசியையும் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். சாதாரண உலகியல் வாழ்க்கைக்கு உறக்கமும், கால உணர்வும் அவசியம். சாலையில் போகின்ற பொழுது கால, இட உணர்வு இல்லை எனில் விபத்து ஏற்படும், அல்லது கிரியா யோகத்தை அதிகமாக அல்லது திடீர் என்று உத்வேகத்துடன் செய்பவர்களுக்கு மனம் அழிந்து, கால இட உணர்வற்று இவ்வாறு விபத்துகள் நேர்வதுண்டு. அதனால்தான் கூர்கிப் போன்ற மேலை நாட்டு ஞானிகள் பிராணாயாமத்தைத் தவிர்கின்றனர். ஆனால் பிராணாயாமமே மனம் கடந்த தூய அறிவு நிலை கொண்ட யோக ஞான அனுபவங்களுக்குக் குறுக்கு வழி. சித்தர் நெறியில் யோகம் எனில் அது வாசியோகத்தையே குறிக்கும்.

யோகத்தின் முடிந்த நிலையில் பிணியல் சுரப்பியில் மெலட்டானின் சுரப்பது மிகவும் குறைந்துவிடும் அல்லது முற்றாக நின்றுவிடும். அப்போது 'அமுதம்' சுரக்கும். அதை உண்ட சித்தர்களுக்கு காலாதீத உணர்வு (Timeless moment) தோன்றும். இதையே 'நித்திய வாழ்வு' (Enternity) என்பர் ஞானிகள்.

மாங்காய்ப் பால் உண்டு மலைமேல் இருப்பார்க்கு
தேங்காய் பால் ஏதுக்கடி-குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி

என்று இந்த திரவத்தை மாங்காய்ப் பால் என்று அழைப்பார் குதம்பைச் சித்தர். கொழுப்பு நீக்கிய தேங்காய்ப் பால் புறப்புற அமுதம் என்பார் இராமலிங்கச் சித்தர். அதை மட்டுமே உண்டு வாழ்வது சித்தர் உணவு நெறி. வாசியோகம் பயின்று புருவ மத்திக்கு உள்ளே உள்ள உயிராகிய மன்றத்தில் இறைஒளியைக் காண்பதே சித்தர் யோகம். கண்டுவிட்டால் மாங்காய்ப் பால் சுரக்கும். அதை உண்ட சித்தர்களுக்கு உலக உணவுகள் தேவைப்படாது.

இவ்வுலக உணவுகளை உண்கின்றவரை மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற விஞ்ஞான உண்மையை வெளிப்படையாகப் பேசுகின்றனர் சித்தர்கள். ஈரமு மன்புங்கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்க மிறவாத சன்மார்க்கந் தோழி
காரமு மிகுபுளிச் சாரமுந் துவர்ப்புங்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ யொழியாதே அந்தோ
ஊழிதோ றூழியு முலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் ஜோதிகண் டாடேடி பந்து.

என்று இதற்கு விதியை வகுத்தளிப்பார் இராமலிங்கர்.

தேங்காய்ப் பாலில் தொடங்கி மாங்காய் பாலில் முடிவதே சித்தர் நெறி. ஞானம், தமிழ் மரபில் உடல் சார்ந்தது. அரவிந்த ஆசிரமத்தைச் சார்ந்த ஸ்ரீஅன்னை 'மோட்சம் பெளதீகமானது' (Salvation is Physical)என்பார். இருண்ட அறிவை நிலைத்த ஒளி பெறச் செய்வது ஞானம், அல்லது நிர்வாணம். இருண்ட, ஏழு தாதுக்களாலான ஊன் உடலை ஒளிபெறச் செய்வது சித்தர் நெறி. இவ்விரண்டுக்கும் இடையே இருண்ட வாழ்க்கையும், அது தோன்றுவதற்குக் காரணமான காற்றையும் ஒளிபெறச் செய்வது இடைநிலை யோகம். இதையே சித்தர்கள் ‘வாசியோகம்' என்றும் ‘சிவராஜயோகம்' என்றும் ‘திருவடிஞானம்' என்றும் ‘பிராசாதயோகம்' என்றும் பலபடக் கூறுவர். இவ்வாறு ‘ஒளிச்சுவாசம்' என்ற இரகசியத்தை உணர்ந்து ஆள்பவர்களே பாட்டுநெறி மூலம் கடவுள் நிலையை அடைய முடியும்.

இராமலிங்கரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி இந்த உண்மையை விளக்கும். அவருடைய செய்யுள் நூல்களை ஐந்து திருமுறைகளாக வகுத்து ‘திருஅருட்பா' என்று பெயரிட்டு அவருடைய சீடர்கள் வெளியிட்டனர். ‘அது அருட்பா அல்ல மருட்பா; அருட்பா என்பது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருடைய அருள் ஞானிகளின் மூலம் இறைவனின் வாக்காக வெளிப்படுவது. அவை தேவார, திருவாசகங்கள் மட்டுமே. நம்மைப் போல் நம்மிடையே மனிதராக உலவும் இராமலிங்கர் இயற்றியது சாதாரண செய்யுள்கள்தான். அவை மருட்பாடல்கள். அவற்றை ‘அருட்பா' என்று அச்சிடக் கூடாது' என்று கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் தென்னார்க்காடு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். நீதிபதி ஆங்கிலேயர். அவைக்கு நாவலர் முன்பே வந்துவிட்டார். காவலாளி இராமலிங்கரின் பெயரைக் கூறி அழைக்க அடிகளார் உள்ளே நுழைந்தார். அனைவரும் எழுந்து நின்றனர். வழக்குத் தொடுத்த நாவலரும் எழுந்து நின்றார். ‘வழக்குத் தொடுத்த நீரே ஏன் எழுந்து நின்றீர்?' என்று அவரிடம் நீதிபதி கேட்டார். அவருடைய அருள் தோற்றம் என்னை அறியாமல் எழுந்து நிற்கச் செய்துவிட்டது என்றார் நாவலர்.

இவ்வழக்கு பாடல் பற்றியது. எனவே புலவராகிய நீங்கள் பாடுங்கள் பார்க்கலாம் என்று நீதிபதி நாவலரிடம் சொன்னார். யாம் உரைநடையாகத் தொடுப்போம் என்று நாவலர் பதிலளித்தார். சரி, நீங்கள் பாடுங்கள் என்று நீதிபதி அடிகளாரிடம் சொல்ல, கண்களை மூடி மடை திறந்த வெள்ளம் போல் அடிகளார் அருட்பாடல்களைப் பொழிந்தார். மெய்மறந்த அவையினர் வியந்து போயினர். இது ‘அருட்பா' தான் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கைப் பற்றிப் பல்வேறுவிதமான விவரணைகள் உள்ளன. ஆனால் அருட்பா, மருட்பா போர் என்பது இரண்டு காலகட்டங்களில் திரு.வி.க. காலம் வரை நீடித்ததைக் காண்கின்ற பொழுது மேலே கூறப்பட்ட கூற்றில் உண்மை இருக்க முடியும் என்றே கருதுகிறேன்.

தொல்காப்பியர் காலம் தமிழ் மரபின் செவ்வியல் காலம். அடையாளம்? காரணப்பெயர்களால் ஆன சொற்களை மட்டுமே நம்பி இலக்கியம் செய்வது செவ்வியல். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் அறிவுத் தர்க்கம், தத்துவம் இருக்கும்-இன்றைய கணினி மொழியைப் போல. தர்க்கப் பின்னணி, தத்துவப் பின்னணி இல்லாத மொழி விரைவில் அழிந்து படும். ஒரு குறிப்பிட்ட பயன்பாடு கருதியே தத்துவம் தோன்றும்; தர்க்கம் செயல்படும். மனிதன் உயர்திணை. உயர்ந்து கொண்டே சென்று இறைநிலை பெற்று ‘சி' (Chi, psi, consciousness force) ஆற்றல்களை அடைந்து சித்தனாகப் பெருவாழ்வு வாழ வேண்டும். இதுவே தமிழ் மரபின் மெய்யியல், தத்துவம். இத் தத்துவத்தைச் செயல்படுத்தத் தோன்றிய நெறி முறையே சித்தர் நெறியும் யோக ஞானங்களும். மனித உடலின் போலி உருவங்களான கோயில் சார்ந்த சரியை கிரியைகளும், வழிபாடும், சமய காலத்துத் திரிபுகள். அதற்குமுன் அவ்விடத்தை வகித்தவை இலக்கணமும், இலக்கியமும். மொழியின் மூலம் இறை(ச்சி) நிலை அடைதல். எனது தொல்காப்பிய ஆய்வில் கண்டடைந்த முடிபு இது. யாம் கண்டடைந்த மற்றும் இரு முடிபுகள்:

1. கிடைத்திருக்கும் தொல்காப்பியம் முழுமையான நூல் அல்ல. கருத்தோட்டத்தில் இடைவெளிகள் காணப்படுகின்றன. முழுமையான நூலைத் தேட வேண்டும்.

2. இடைச் செருகல்கள் நிறைய உண்டு. இதைப் பற்றி நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற பல தமிழறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஆண்டுக் காண்க.

தொல்காப்பிய உரை விளக்கத்தில் காணக்கிடைக்கும் குழப்பங்கள் பெரும்பாலானவற்றுக்கும் இவையே காரணங்கள் என்று கருதுகிறோம். தனி நூல் வேண்டும் பொருள் அது. இங்கு இடமில்லை. உள்ளுறை, இறைச்சி-இவையே இப்போது நம் கவனப்பொருட்கள். எம் ஆய்வில் யாம் அடைந்திருக்கும் பொதுவான முடிவு: உவமம் வெளிப்படையானது. உள்ளுறை குறிப்பால் உணர்த்தப் பெறும். இறைச்சி குறிப்புகளும் அற்று, ஆனால் குழூஉக் குறிகளால்-ஜென் புதிர் போல-மொழியின் மூலம் மொழியைக் கடந்து உணர வைக்கப்படும். மெய்ப்பொருள் நுணுக்கரிய நுண்ணுணர்வு. இமைப் பொழுது, அணுஅளவு, நேநோ செகண்டு இவற்றைப் போல கோடி கோடி மடங்கினும் நுட்பமானது இறைப்பொழுது, இறையளவு. இறை-உணர்வு நிலை, மெய்யறிவு. ‘சி' அந்நிலையில் தோன்றும் ஆற்றல் (Power, force). அவற்றைச் செய்யுளில் உணர வைக்கும் யோக நெறி ‘இறைச்சிப் பொருள்.' முழுமையான யோகி, முற்றுணர்ந்த ஞானி, வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் காண்பது, பயன்படுத்துவது இறைச்சிப் பொருள். எத்துணை அளவு இறைச்சிப் பொருள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அளவு முதனூல்; அந்த அளவே அதன் ஆயுள். திருக்குறள், திருவருட்பா போன்ற வேதங்கள் எக்காலத்திலும் அழியா. ஏனெனில் முழுதும் இறைச்சியால் ஆனவை அவை. ஒரு விதி யாம் கண்டது. அறிஞர் ஆய்க. மறையாக எழுதப்படும் முதனூலின் முதல் செய்யுள் இறைச்சியுடன் தொடங்கும். இடைச் செருகலை அறிய இது ஓர் உத்தி. ‘அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்' என்று தாயுமானவர் தம் நூலைத் தொடங்குவதும், ‘திரு ஓங்கு' என்று அருட்பா துவங்குவதும், ‘அகர முதல எழுத்தெல்லாம்' என்று ஆதி மறை ஆரம்பிப்பதும் பேசா இம் மரபின் வழிப்பட்டவை.

இறைச்சியொ டுள்ளுறை ஈண்டறிந்தார், காண்பார்
புறத்தொ டகத்துப் பொருள் -சித்பவானந்தம்

புறம் என்பது உலகும், உடலும். புறப்புறம் மனம். அகப்புறம் உயிர். அகம் இறை. அகத்துப் பொருள் இறைப்பொருள்.

பெருவிரல் விதியாக (Thumb rule) ஒன்றை வைத்துக் கொள்ளலாம். உள்ளுறை என்பது உயிர். இறைச்சி என்பது இறைநிலை உணர்வு.

அறிவு அற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள் அழிக்கலாகா அரண்
என்ற குறட்பாவில் ‘உள்' என்ற சொல்லை உயிர் என்ற பொருளிலேயே வாலறிவன் உணர்த்துகிறான்.

தமிழ் மரபின் நோக்கமும் தொடக்கமும் தொடர்ச்சியும் யாவும் மறந்து பிற மொழிக் கவர்ச்சியின் பால் சிக்குண்டு அம்மொழிகளின் மரபுக் கண் கொண்டு பார்க்கும் வரை உண்மை புலப்படாது. பார்வையிலுள்ள பழுதை முதலில் நீக்கிக்கொள்ள வேண்டும்.

குறிப்புப் பொருளை உணர்த்த வந்த உத்திகள் உள்ளுறையும் இறைச்சியும். ஆனாலும் செயல்பாட்டில் வேறுபட்டு நிற்கும்.

‘‘உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகஎன
உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்''
‘‘இறைச்சி தானே பொருட்புறத் ததுவே'' -தொல்காப்பியம்.

‘இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுகிறீர்கள். எனக்குப் புரியவில்லை' என்று நான் புகார் சொன்னபோது என் தமிழாசிரியர் கூறியது: ‘‘பல பிறவிகள் பல ஆண்டுகள் தொடர்ந்து சாணித்தலின் (தியானித்தலின்) மூலமே உய்த்துணர முடிவதை ஒரு நொடியில் ஒரு சொல்லில் தெரியப்படுத்து என்கிறாய். இளமையின் பொறுமையின்மை இது. அறிவில் சோம்பல் இது. தமிழ் மரபை, நெடுங்கணக்கின் மரபை, இலக்கண இலக்கிய மரபை ஊன்றிப் படி. மாளா ஆக்கை பெற்ற சித்தர்களால் எழுதப்பட்டவை அவை. பேரருளாளர்கள் அவர்கள். உயிரால் கேள். இறைஞ்சு. உண்மை உரைக்க என்று கண்ணீர் விடு. அழுதால் இறைப் பொருளைப் பெறலாம்- மாணிக்கவாசகனைப் போல, இராமலிங்கரைப் போல. ஒரு குறிப்பு தருகிறேன். நூலைப் பிடித்துக்கொண்டு மேலேறிச் செல். புகழ் பெற்ற சங்கப் பாடல் ‘யாயும் ஞாயும் யாயாகியரோ...' அதில் ‘செம்புலப் பெயல் நீர்' என்ற சொற்றொடர் எதைக் குறிக்கிறது? உரையாசிரியர்கள் போல் உலகியல் சார்ந்து ‘செம்மண்ணில் விழுந்த மழை நீர்' என்று அகராதிப் பொருள் கொண்டால் விழிப்பு நிலைக்கு இன்னும் நீ வரவில்லை என்று பொருள். பல்கால் ஆய்ந்து தம் உள்ளுணர்வால் உணர்ந்து உரைத்தார் மலையாள ஐயப்ப பணிக்கர்: திராவிட மொழிகளின் அழகியல் மறைத் தொகுதி தொல்காப்பியம்.

அறிஞர் குழுக்களின் தொடர்ந்த ஆய்வை வேண்டி நிற்பது உள்ளுறை மற்றும் இறைச்சிக் கோட்பாடு. வாலறிவு பெற விழைவோர் செல்ல வேண்டிய பாதை. இறைநிலையை ‘சச்சிதானந்தம்' என்ற சொல்லால் உணர்த்துவர் வட நூலார். இது வட சொல்லா? மூலக் கருத்துகள் ஆதித் தமிழ் மரபின் சொத்து. சத்+சித்+ஆனந்தம் என்பவற்றில் ‘ச' இறைநிலை உண்மை, என்றும் அழியாமை. என்றும் உள்ள பொருள். ‘சி' இறைநிலை அறிவும் ஆற்றலும். ஆனந்தம் படைப்பினால் தோன்றும் மட்டற்ற களிப்பு. 'ஆ' எனில் ஆன்மா, உயிர், எல்லையில்லா இன்பத்தால் தோன்றும் வியப்புணர்வு. ‘ஆ! செத்தேன்' என இறைநிலை அனுபவத்தை மாணிக்கவாசகர் விவரிப்பார். மனம் என்ற கொள்கலத்தால் தாங்க முடியாத உயிரனுபவம், அருளனுபவம் மற்றும் இறையனுபவம் என்று வகைப்படுத்தி விளக்குவார் இராமலிங்கர். மனம் செத்தால் ஆனந்தம். மனம் வரை மனித நிலை. கடந்தால் மேல்நிலை. ‘சத் (அ)-இறைநிலை. ‘ச' இறங்கி வந்தால் ‘சி' (உ) அருட்சக்தி. அகர உகரக் கலப்பினால் மகரம் என்ற படைப்பு உலகம். படைப்பினால் ஆனந்தம். இறை, அருட்சக்தி, உயிர்கள் மூன்றும் ஒன்றே. விரிப்பின் படைப்பு. ஒன்றினால் தனிமை.

ஒளி (தீ), காற்று (உயிர்ப்பு), வெளி-மூன்று நிலைகளும் ஒன்றானது அநாதி இறைநிலை என்பார் திருமூலர். சிவவெளி, சிவ ஒளி, (சிவச் சுவாசம்) வேகாக் கால் என்பன அவர் கையாளும் சொற்கள். உயிர் பேருயிரின் உடம்பில் ஒரு செல். அருட்பெருஞ் சோதியின் ஒரு பொறி.

வேத காலத்திற்கு முற்பட்ட ஒரு மரபு, மெசபடோமிய, சால்டிய (Chaldean civilization) நாகரிகத்திற்கு முற்பட்ட ஒரு மரபு தமிழ் மரபு. உலகின் எட்டுத் திசை ஞானிகளும் ஏற்றுக் கொண்ட உண்மை இது. வடமொழி வேத வேதாந்தங்களைக் கரைத்துக் குடித்த பின் அவற்றிலுள்ள பூட்டுகளுக்கெல்லாம் திறவுகோல்கள் தமிழில்தான் உள்ளன என்பதைத் தன் உள்ளுணர்வு உணர்த்த தென்திசை நோக்கிப் பயணம் செய்து புதுச்சேரியில் ஆசிரமம் அமைத்து, நிரந்தர வீடாக்கிக் கொண்டு தமிழ்ச் சித்தர் நெறியை ஏற்றுக்கொண்டு பரிணாம விஞ்ஞானத்தின் துணையுடன் அழகான ஆங்கிலத்தில் கவிதைகளாக, கட்டுரைகளாக, யோக நூல்களாக, தத்துவ நூல்களாக அதை உலகறியச் செய்த மகான் அரவிந்தர். அவருடைய கொள்கையான சித்தர் நெறியைத் தன்னளவில் தானே ஞானத்தில் கண்டடைந்து பாரீஸ் நகரிலிருந்து பாண்டிச்சேரி வந்து அவருடன் இணைந்து உலகளாவிய ஓர் அமைப்பைத் தோற்றுவித்த இயக்கமாக்கியவர் அன்னை மிர்ரா. உலகின் ஆதி மரபைப் பற்றி ஸ்ரீஅரவிந்தர் சொன்னது, ‘‘...a tradition older than the veda and the chaldean tradition.'' இவ்வாறு அவர் அறிவித்ததன் காரணம் சித்தர் நெறியே (அண்டத்தில் உள்ளது யாவும் பிண்டத்தில் உண்டு) மனிதனின் உண்மையை முழுமையாக அறிந்து உரைத்தது என்பதால்தான்.

‘Man the microcosm... (It) had a higher opinion of mankind, putting it ofdern above the gods, and always saw the human being as a microcosm, the cosmos in miniature, containing or at least reflecting in itself everything the cosmos contains... All things are; potentially contained in that substance that constitutes man... In an essential way, each being contains in itself all the universal potentialities.'OVERMAN - Georges Van Vrekhem - Rupa@co.2001

இதை 'சீவன் என சிவன் என வேறில்லை' என்று உணர்த்துவார் திருமூலச் சித்தர்.

திணைக் கொள்கை இவை யாவற்றையும் உள்ளடக்கியது. திணை இரண்டு: அஃறிணை, உயர்திணை. அஃறிணையே சடத்திலிருந்து உயிராகித் தாவரமாகி, விலங்காகி, மனிதனாகி உயர்திணை ஆகிறது. மனம் மேல் நிலை மனமாகி, அதி மனமாகி வாலறிவு பெற்று இறைநிலை அடைவது வரை பரிணாம வளர்ச்சி. இவை யாவும் திணைக் கொள்கையின் உட்பொருள். திணை=த்+இணை. உடலுக்கு இணையானது.

திணைகள் புறத்திலும் அகத்திலும் ஐந்து. முதற் பொருள் நிலமும் பொழுதும். அகத்திணைகள் சிந்தனையால் மாற்றம் பெற்று உயிர் பெற்று ‘செம்புலம்' ஆவதை ‘வான் புரிதல்' என்பர் சித்தர்கள். மண்மாண் நுண்மாண் ஆவதும், அழியும் மனித உடலில் எழிலும், நலமும் அழியாத இறைநிலை அடைதலும் திணைக் கொள்கையின் இறைச்சிப் பொருள்.

கோடு போடுகிறேன். இராஜபாட்டை ஆக்குவது எதிர்கால அறிஞர்தம் பணி. புதிய பார்வை தருவது என் கடமை. அத்திசையில் பயணித்து ஆதிச் சித்தர் மரபை மீட்டெடுப்பது தொடர்ந்து வரும் தலைமுறையினரின் பணி. நூறு வெளிச்சங்களில் தொண்ணூற்று ஒன்பது மின்மினிகளானாலும் ஒன்று உண்மை உள்ளொளியானால் அந்த அளவு ஆன்ம இலாபம் தானே? குற்றங்களைத் தள்ளி குணம் கொள்க அறிவுடையோர்.

http://www.tamizhini.com/article19.html

சித்தர்கள் யார் ?

சித்தர்கள் கூடுவிட்டுக்கூடு பாய்தல்... ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடங்களில் தென்படுதல்... சட்டென்று மறைந்து தோன்றுதல் போன்ற எண்ணற்ற சித்தாடல்களை செய்திருக்கிறார்கள். 'இதெல்லாம் சாத்யமா?'என்று நாம் யோசிக்கத்தோன்றும் அவர்கள் அதையெல்லாம் நிஜம் என்று உணர்த்துகிறார்கள்.

மனித உடல் ஐந்து வகை என்கிறார்கள். முதலில் உயிர்க்காற்றால் வளர்க்கபடுகிறது காற்றுடல் அடுத்து உணர்வுகளினால் வளர்க்கப்படுகிறது. மன உடல் அடுத்து எண்ணங்களால் உருவாக்கப்படுகிறது அறிவு உடல். அதற்கடுத்து உணர்வுகளால் வளர்க்கப்படுகிறது. மன உடல். இந்த மூன்றிற்கும் மையமாக பேரின்ப உணர்வில் வளர்க்கப்படுகிறது. இன்ப ஆனந்த உடல். ஆக... அன்னமய உடல் பிராணமய உடல் மனோமய உடல் விஞ்ஞான மய உடல் ஆனந்த மய உடல் என ஐந்து வகை உடல்களை ஒவ்வொரு மனிதனும் பெற்றிருக்கிறான். என்கிறார்கள். இந்த ஐந்து உடல்களும் ஆன்மா என்கிற உயிருக்கு மேலே ஒன்றின் மீது ஒன்றாக பதிந்திருக்கின்றன. ஆனால் இவை ஒன்றையொன்று ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. எங்கும் நிறைந்து ஒளி வீசும் நுண்ணிய உணர்வு படிப்படியாகத் நுண்மையை இழந்து பருமையாகி நம் கண்களுக்கு தெரிகிற பரு உடலாகிறது என்கிறார்கள் சித்தர்கள்.

அப்படியென்றால் உயிரின் பணி என்று கேட்கலாம். நம் ஆன்மா என்பது உடல் என்கிற மரப்பொம்மையை அசைய வைக்கிற சக்தியாகும். சித்தர்கள் ஆன்மாவை திடமாக நம்பியவர்கள். "உயிரு நம்மையால் உடலெடுத்து வந்திடும்" என்கிறார் சிவவாக்கியர். அதே போன்று "உயிர்த்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்ற தப்புவில்" என்கிறார் கடுவெளிச்சித்தர். "உயிரெனும் குருவி விட்டோடுங்குரம்பை" என்று உயிரை உடலில் குடியிருக்கும் பறவையாக குறிப்பிடுகிறார் பட்டினத்தார். உடலை ஆட்டுவிப்பது உயிர் என்பதை குறிக்கும் விதமாக "நந்த வனத்திலோர் ஆண்டி" பாடலில் விளக்குகிறார் திருமூலர். அதுமட்டுமல்ல "சூரியனின் வெப்பத்தால் கடல் நீர் உப்பாகிறது. அந்த உப்பு மீண்டும் தண்ணீரில் கரையும் போது தண்ணீரில் அடங்குகின்றது. உப்பு எங்கிருந்து வந்ததோ அங்கேயே அடங்குவதைப்போன்று உயிர் சிவத்திலிருந்து தோன்றிச் சிவத்துக்குள்ளேயே அடங்கும்" என்கிறார்.

உயிர்கள் நான்கு வகைத் தோற்றமாகவும் ஏழு வகைப் பிறப்பாகவும் என்பத்து நான்கு லட்சம் உருவ வேற்றுமைகளோடும் பிறக்கின்றன என்கிறது சிவஞான சித்தரின் நூல். அதிலும் பட்டினத்தார் தனது பாடலில் "புல்லாகி பூண்டாய் . கல்லாய் மரமாய் கீரியாய் நரியாய் ஊர்வனவாய் பூதமொடு தேவருமாய் வேதனை செய்வதானவராய் உயிர்கள் பிறக்கின்றன என்கிறார்.
ஆக சித்தர்கள் ஆன்மாவையும் உடலையும் மிக துள்ளியமாக அறிந்து உடல் இயக்கத்தை ஆராய்ந்த நூல் தான் அவர்களால் 'மாயை' என்கிற அமானுஷ்யத்தை நிகழ்த்த முடிந்தது. கூடுவிட்டு கூடு பாய்தல் பல இடங்களில் தோன்றி மறைதல் போன்ற அற்புதங்களை செய்ய முடிந்தது.
இப்போது நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கூரில் வாழ்ந்து பல சித்தாடல்களையும் ஆச்சர்யங்களையும் நிகழ்த்திய மகடிச் சித்தரைப் பற்றி அறியப் போகிறீர்கள்.

மகடி சித்தர்
ஒல்லியமான தேகமும் கூர்மையான பார்வையும் கருமையான தாடியுமாக திருவிதாங்கூர் நகரில் சுற்றித்திரிந்த இந்த சித்தர் நம் சம காலத்தை சார்ந்தவர் இவர் 1950லிருந்து 1955_க்குள் ஏகப்பட்ட அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.

இவர் ஒரு இஸ்லாமியர் என்றாலும் மத வேறுபாடுகள் இல்லாமல் தன்னை நாடி வருபவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்திருக்கிறார். பல மொழிகள் பேசத் தெரிந்த இச்சித்தர் யார் என்ன மொழியில் தங்கள் குறைகறைச் சொன்னாலும் உடனே அதை கேட்டறிந்து அவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே நல்லாசி வழங்குவார்.

சித்தர் கண்கள் மிகவும் ஒளிப்பொருந்தியவை. அவரது கண்களை சாமான்யமானவர்கள் நேருக்கு நேராக பார்க்கவே முடியாது. அவராக நம் கண்களை ஒரு நொடி கவனித்தாலே போதும். நமக்குள் மெலிதாக அதிர்வு ஏற்படும். அடுத்தநொடி நம்மையறியாமல் நம் பிரச்சனைகளை ஒளிவுமறைவு இல்லாமல் அவரிடம் சொல்லிவிடுவோம்.

தீராத நோய் கடல் தொல்லை. பிள்ளைபேறு இல்லாமை என எந்த பிரச்சனையானாலும் அவர் தனது அமானுஷ்ய சக்தியால் குணப்படுத்திவிடுவார்.

அவர் அங்கே நிகழ்த்திய அற்புதங்களை கேட்கும் போது நமக்குள் வியப்பு ஏற்படும்.

1950 ஆம் வருடம் அவர் திருவனந்தபுரம் கன்னியாகுமரிக்கு இடையே அப்போது இயங்கிக் கொண்டிருந்த சிண்டிகேட் பஸ்ஸில் சென்றுக் கொண்டிருந்தார். பஸ்ஸில் இருந்தவர்களில் பலர் அவரது அமானுஷ்ய சக்தியை அறிந்தவர்கள் என்பதால் சித்தரை நெருங்கி தங்கள் குறைகளை சொல்ல முற்பட்டனர். ஏகப்பட்ட மனிதர்கள் தன்னை நெருங்குவதில் திகைப்படைந்த சித்தர்.. பஸ் சுசீந்திரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சரேலென பஸ்ஸிலிருந்து தாவி ஆற்றுக்குள் குதித்துவிட்டார். பஸ்ஸிக்குள்ளே இருந்தவர்கள் அதிர்ச்சியாய் பஸ்ஸை நிறுத்தச் சொல்லிவிட்டு ஆற்றக்கரைக்கு ஓடி வந்தனர். அங்கே சிரித்த முகமாய் தண்ணீருக்குள்ளிருந்து வெளிப்பட்ட சித்தர்... "நீங்க போங்க நான் குளிச்சிட்டு வர்ரேன்" என்றார். அடுத்த நிமிடம் பஸ் புறப்பட... பஸ்ஸினுள்ளே எல்லோருடைய பேச்சும் சித்தரைப் பற்றியே இருந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பஸ் தக்கலை வந்த சேர்ந்தது. அப்போது தக்கலை பஸ் நிறுத்தத்திற்கு அருகே இருந்த ஒரு மண் திண்டின் மீது சித்தர் சம்மணமிட்டு அமர்ந்திருக்க... பஸ்ஸிலிருந்த அத்தனைபேரும் ஆச்சர்யமாய் சித்தரை பார்த்தனர். 'சுசீந்திரம் பாலத்திற்கு கீழே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இவர் எப்படி தக்கலை பஸ் நிலையத்திற்கு வந்தார்? அந்த வழியாக வருவது இது ஒரு பஸ் தானே. எப்படி. எப்படி அவரால் இது முடிந்தது?" கேள்வியாய் அவர்கள் பார்க்க... சிரித்த படியே சித்தர் "எனக்கு ஒண்ணும் ஆகலேன்னு சொல்லத்தான் இங்கே காத்திருந்தேன். வரட்டுமா?" என்று சொல்லிவிட்டு நகர ஆரம்பித்தார். இது போன்று ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றிய அதிசயத்தையும் சித்தர் நிகழ்த்தியிருக்கிறார். ஒரு முறை திருவிதாங்கூரில் வாழ்ந்த சில கட்டிடத் தொழிலாளர்கள் கட்டுமான வேலைக்காக ஆஸ்திரேலியா செல்ல இருந்தனர். அதற்கு முன்பாக சித்தரிடம் ஆசி பெறும் விதமாக அவரை வணங்கச் சென்றனர். அவர்கள் எதற்காக தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை தனது அமானுஷ்ய சக்தியால் உணர்ந்து கொண்ட சித்தர். "கடல் தாண்டி வேலைக்கு போறீங்களா? போய்ட்டு வாங்க ஒரு குறையும் இருக்காது" என்று சொல்ல. அவர்கள் நன்றியுணர்வாய் சித்தரை வணங்கிவிட்டு நகர்ந்தனர். அதில் ஒருவர் 'நான் சித்தரிடம் என் மகளின் கல்யாணம் இந்த வருடத்திற்குள் நடந்துவிடுமா?' என்று கேட்கலாம் என நினைத்தேன். அதற்குள் நீங்கள் அழைக்கவே கேட்காமலே வந்துவிட்டேன் என்றார். அன்றே அவர்கள் சென்னை பயணமாகி அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் அவர்களது கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்க ஒரு நாள் அவர்கள் வேலை பார்த்த இடத்திற்கு மகடி சித்தர் வந்தார். எதிர்பாராத விதமாக சித்தர் எப்படி இந்த நாட்டிற்கு வந்தார்? என்று அத்தனை பேரும் ஆச்சர்யமுகமாய் அவரைப் பார்த்தனர். உடனே சித்தர் தன் மகளின் திருமணம் பற்றி கேட்க மறந்த நபரை நெருங்கி "உன் மகளுக்கு அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாக கல்யாணம் நடந்திடும் அதுக்குள்ளே உங்க வேலை முடிஞ்சு நம்ம ஊருக்கு வந்திடுவீங்க "இதை சொல்லத்தான் இங்கே வந்தேன் வரட்டுமா?" என்று நகர எல்லோரும் ஆச்சர்யமாய் அவரை பார்த்தனர். சித்தர் சொன்னது போலவே அவரது வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்து சம்மதித்து விட்டதாக கடிதம் வர அந்த நபர் ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றனர். அதை விட தங்கள் வீடு தேடி வந்து சித்தர் ஆசி வழங்கிவிட்டு போனதாக எழுதியிருந்ததைப் படித்து மேலும் ஆச்சர்யமானார்.

அடுத்த ஆறுமாதத்திற்குள்ளாகவே அவர்களின் வேலை முடிந்துவிட திருவிதாங்கூர் திரும்பிய அவர்கள் சித்தரிடம் செல்ல... "எல்லாம் புரிந்தவர் போன்று" அவர்களை பார்த்து மெல்ல புன்னகைத்தார் சித்தர். உடனே அவர்கள் சித்தர் ஆஸ்திரேலியா வந்திருந்த விஷயத்தை சொல்ல அதை நம்ப மறுத்த கிராமத்தினர் "இவர் இங்கே தான் இருக்கிறார். இங்கிருப்பவர் விசா பாஸ்போர்ட்இ பணம் இல்லாமல் எப்படி ஆஸ்திரேலியா வர முடியும்?" என்று கேட்க.. அவர்கள் சித்தரின் அமானுஷ்ய சக்தியை ஊருக்கு எடுத்துரைக்க எல்லோரும் அவரை திகைப்பாக வணங்க ஆரம்பித்தனர்.

இந்த அற்புதங்களைப் போலவே சுடுகாட்டில் இரவு நேரத்தில் தனது உடலை கைவேறு கால் வேறு என தனித்தனியாக அவர் பிரித்து போட்டிருந்ததைப் பார்த்து பலரும் அதிர்ச்சியும். ஆச்சர்யமும் அடைந்திருக்கிறார்கள்.
சித்தரை பொறுத்தவரை அவர் முன்னே பசியோடு பிணியோடு யாரும் இருக்கக் கூடாது. ஊருக்குள்ளே எங்கே பசியும் பிணியும் இருக்கிறதோ அங்கே ஓடோடிச் சென்று உதவுவார்.

பசித்தவர்கள் வீட்டின் முன்னே உணவுப்பொருட்களை வைத்து 'மகடி' என்று குரல் கொடுப்பார்... அடுத்த நொடி வீட்டுக்குள்ளே இருப்பவர்கள் வெளியே வந்து பார்த்தால் உணவு மட்டும் இருக்கும்.

அவர் இருக்க மாட்டார். அதே போல் பிள்ளை பேறு இல்லாதவர்கள் தன்னை தேடி வந்தால் தன் கையில் இருக்கும் உணவுப் பொருளை கொடுத்து சாப்பிடச் சொல்வார். அதை சாப்பிட்ட அவர்களின் வயிற்றில் கண்டிப்பாக குழந்தை உருவாகிவிடும்.

சித்தரின் அருளால் குணமடைந்த பல செல்வந்தர்கள் அவர் கேட்டதை அள்ளித்தர தயாராக இருந்தனர். ஆனால் அவர் கிழிந்த துணியும் தண்ணீரும் மட்டுமே தனக்கு போதும் என்றார். பிரதியுபகாரம் கருதாது அவ்வூரில் ஏக்கப்பட்ட நன்மைகள் அருளிய சித்தர். ஒரு நாள் ஒரு பெட்டிக்கடைக்காரர் தன்னை ஒரு பாக்கு வெட்டியால் தாக்க முயன்றதால் அந்த கடைக்குள்ளேயே தூக்கில் தொங்கினார். உடனே போலீசுக்கும் டாக்டருக்கும் தகவல் தரப்பட்டது. அவர் உடலை கயிற்றிலிருந்து வெளியே எடுத்து போஸ்ட் மார்டத்துக்கு ஆயுத்தமாயினார். டாக்டர் கூரிய கத்தியை எடுத்த நொடியில் சித்தர்கள் சடாரென கண்களைத் திறந்து துள்ளிக் குதித்து ஓடினார். சுற்றிலும் இருந்தவர்கள் அதிர்ச்சியாய் சித்தரை பார்த்தனர். அவர் புன்னகை முகமாய் "அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டு போகமாட்டேன். இங்கே எனக்கு நிறைய வேலை இருக்கு. அதையெல்லாம் முடிச்சிட்டு தான் போவேன்" என்றார். அவர் சொன்னது போலவே அதற்கு பிறகு. எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திவிட்டு திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார். அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. திருவிதாங்கூர் புதுப்பள்ளிக்கு எதிரே அவர் சமாதிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சென்ட் நிலமும் புளியமரமும் அவரின் புனிதத்தை இன்றும் உணர்த்தி கொண்டிருக்கிறது. நீங்களும் அங்கே சென்று அந்த புனித பூமியை தரிசித்துவிட்டு வாருங்கள் உங்களுக்கும் நலம்பல வழங்குவார் அந்த மகா சித்தர்.

http://groups.google.ge/group/Piravakam/msg/735a53f849265467?

ஈழத்துச் சித்தர்கள்


ஈழத்துச் சித்தர்கள் - நூல்விபரம்


கடந்த காலங்களில் ஈழத்தில் வாழ்ந்த பதினாறு ஈழத்துச் சித்தர்களை இந்நூல் அறிமுகப்படுத்துகின்றது.

வாசிக்க


சித்தர்கள்

சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.
சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.

சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.

சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்.

சித்தர்களின் கொள்கை
பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.

சித்த வைத்தியம்
சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் விஞ்ஞான அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர். அவ்வைத்டிய முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர். மக்கள் அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் உடல் நோயை உண்டாக்கும் என்றும் யோகப்பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.

"உலகில் சாவாமைக்கு வழிகாண முடியும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மருத்துவ முறை சித்த மருத்துவமே."[1]

சித்தர்களின் இரசவாதம்
சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.

காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இன்றிருப்பதைப்போல பரிசோதனை சாலைகள் அன்று இருக்கவில்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சித்தர்களின் ஞானம்
மதவாதிகள், ஆத்திகர்கள், அவனன்றி ஓரணும் அசையாது என்று நம்பிக்கை உள்ளவர்கள் மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.

சித்தர்களும் சூஃபிகளும்
இஸ்லாமிய மதத்தின் சூஃபி மரபினரை தமிழ் சித்தர்களுடன் இணைத்து பார்க்கும் வழக்கும் உண்டு. இது எவ்வளவு பொருந்தும் என்பது கேள்விக்குறியானதே. எனினும் பல இஸ்லாமிய பின்புலம் கொண்டவர்களும் சித்தர்களாகக் கொள்ளப்படுகின்றார்கள்.

தமிழ்ச் சித்தர்கள்
தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர். [4] அவர்கள் வருமாறு;-

1 திருமூலர்
2 இராமதேவர்
3 கும்பமுனி
4 இடைக்காடர்
5 தன்வந்திரி
6 வால்மீகி
7 கமலமுனி
8 போக நாதர்
9 மச்ச முனி
10 கொய்கணர்
11 பதஞ்சலி
12 நந்தி தேவர்
13 போதகுரு
14 பாம்பாட்டி
15 சட்டைமுனி
16 சுந்தரானந்த தேவர்
17 குதம்பைச் சித்தர்
18 கோரக்கர்
எனினும், பிற்காலத்தில் பல சித்தர்கள் இவர்கள் வழியில் தோன்றினர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Thursday, August 6, 2009

அறியாத ஒன்றும்..... உணராத ஒன்றும் கூட

யாழ்ப்பாணத்தில் இன்றைய திகதியிலும் பலர் சித்தர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் இவர்கள் சாதாரண உலக வாழ்விற்கான பண்டங்களையும் சேவைகளையும் பொதுச் சந்தைக்கு வழங்காத காரணத்தால் மக்கள் மத்தியில் இவர்களுக்கு மதிப்பும் இல்லை, வரவேற்பும் இல்லை.

ஆனாலும் கோவில் வாசல்களில் இருக்கும் இவர்களால் ஒரு மனித இனம் இந்த பூவுலகில் தக்க வைக்கப்பட்டுள்ளது. என்பது பெரும்பாலும் அறியாத ஒன்றும்..... உணராத ஒன்றும் கூட